உலக மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி கேப்ரியோ காலமானார்

உலக மக்களின் இதயங்களை வென்ற நீதிபதி கேப்ரியோ காலமானார்

மனித நேயம், நகைச்சுவை, கருணையால் உலக மக்களை கவர்ந்த“Caught in Providence” நிகழ்ச்சியின் பிரபல நீதிபதி ஃப்ராங்க் கேப்ரியோ தனது 88 வயதில் காலமானாார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணச் செய்தியை குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர்.

அன்பு, தாழ்மை, மனிதர்களின் நல்ல மனதின் மீதான நம்பிக்கை இதுவே கேப்ரியோவின் தனித்துவம். நீதிமன்றத்தில் அவர் காட்டிய மனித நேயம், நகைச்சுவை, கருணை ஆகியவை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்தன.

இந்நிலையில், உயிரிழப்பதற்கு முன்னர் தனது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்திருந்த அவர், “தன் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், உங்களின் பிரார்த்தனைகள் எனக்கு வலிமை தரும்,” என்றும் தெரிவித்திருந்தார்.

“உலகின் மிக கருணையுள்ள நீதிபதி” என அழைக்கப்பட்ட காப்ரியோ, தனது தீர்ப்புகளை எப்போதும் மனித நேயம் மற்றும் புரிதலின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

அபராதம் கட்ட முடியாத ஏழை குடும்பங்களுக்கு உதவியது, ஊக்கமளித்த வார்த்தைகள் கூறியமை உள்ளிட்ட பல காணொளிகள் இணையத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தன.

ரோட் ஐலண்ட், புரவிடனில் பிறந்த அவர், பல தசாப்தங்கள் மாநகர நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் அவரது நீதிமன்றம் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக மாற்றப்பட்டு, “Caught in Providence” 2018 முதல் 2020 வரை ஒளிபரப்பாகியது.

“நீதி என்றால் நியாயம் மட்டுமல்ல, அன்பும் சேர்ந்து இருக்க வேண்டும்” என்ற அவரது நம்பிக்கையை அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. தனது சட்டப் பணியுடன், குடும்பத்திற்கும் பெரும் முக்கியத்துவம் அளித்தவர்.

இந்நிலையில், ரோட் ஐலண்ட் ஆளுநர் டான் மெகி, “காப்ரியோ எங்கள் மாநிலத்தின் உண்மையான பொக்கிஷம்” எனப் புகழ்ந்து, அவருக்கு மரியாதை செலுத்திய மாநிலக் கொடியை அரை கம்பத்தில் பறக்க உத்தரவிட்டுள்ளார்.

Share This