நாட்டில் 4 ஆயிரம் சிறுர்கள் பாதுகாப்பற்ற நிலையில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட நாட்டில் நான்கு ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று புதன்கிழமை (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சிறுவர்களின் தாயார் அல்லது தந்தையார் வெளிநாடு சென்றுள்ளமை அல்லது சிறுவர்களை விட்டுவிட்டு தாய் அல்லது தந்தைய வேறு திருமணம் செய்துள்ளமை அல்லது போதை பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற காரணங்களினால் தாய் தந்தை இல்லாது மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்
அதேவேளை மேல் மாகாணத்தில் 2019 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதுடன், நாடு முழுவதும் நான்கு ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
எனவே இந்த குழந்தைகளுக்கு அன்பு, பராமரிப்பு, ஆதரவை வழங்குவதற்கும் அவர்களின் கல்வியை பல்வேறு வழியில் தொடர்வதை உறுதி செய்வதற்கு திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.
அத்துடன் மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் 600 பொலிஸார் கடமையாற்ற வேண்டிய நிலையில் 300 பொலிஸார் மாத்திரமே தற்போது உள்ளனர்.
எனவே இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய 50 பொலிஸார் மாவட்டத்துக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனைகளை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையுடன், பொலிஸார் இணைந்து ஒவ்வொரு பொலிஸ் நிலைய பிரிவுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு இந்த சட்டவிரோத மதுபானத்தை இல்லாது ஒழிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக பிரதேச சபை தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடாத்தி கவலைகளை முன்வைத்தனர்.
இதற்கமைய புவியியல் சுரங்க பணியகம் ஒவ்வொரு நபருக்கும் வழங்கும் உரிமம் தொடர்பாக எந்த நேரத்திலும் பொலிஸார் பிரதேச செயலாளர், பிரதேச சபையினர் கேட்டால் தெரிவிக்கவேண்டும்.
அவ்வாறே இன்றுவரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மண் அகழ்வு அனுமதிபத்திரம் தொடர்பாக உடனடியாக அரசாங்க அதிபருக்கும் மற்றும் அபிவிருத்திகுழு தலைவருக்கும் வழங்கப்படவேண்டும்.
அதேவேளை இந்த சட்டவிரோத மணல் அகழ்வோர் வாகனங்களை நிறுத்தி தேவையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்