முல்லைத்தீவில் தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (24.07.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து குறித்த தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைப் பை ஒன்று பொருட்களுடன் இருந்துள்ளது.
அதனை அவதானித்த ஊர்மக்கள் பொலிஸார், கிராமசேவகருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கிராமசேவகர் கிணற்றினை பார்வையிட்டபோது சடலங்கள் நீரில் மிதப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது
குறித்த சடலங்களை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உசாகரன் மாலினி (வயது38) , உசாகரன் மிக்சா (வயது11) உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.