இந்திய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் இராஜினாமா

இந்திய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் பதவி விலகியுள்ள நிலையில் இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருந்தார்.
ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களால் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அவர் குறித்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஒகஸ்ட் 10 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது.
இந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 10-ம் திகதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றிய தன்கர் 2022 ஆம் ஆண்டில் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
தனது பதவிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஆதரவு விலை மதிக்க முடியாதது என்று ராஜினாமா கடிதத்தில் தன்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த குடியரசு துணை தலைவர் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.