ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

வவுனியா நகரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன் பேசும்போதே, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் அறநெறி வகுப்புகளில் பங்கேற்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியதை அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், மாநகர எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் 10 இற்கும் அதற்குக் கீழும் உள்ள மாணவர்களுக்கான தனியார் கல்வி வகுப்புகளை நடத்தக் கூடாது என மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை குறிப்பிட்டார்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் 10 மற்றும் அதற்குக் கீழான மாணவர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகள் நடத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வவுனியா மாநகர சபை அமர்விலும் இதே தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததுடன், தரம் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகள் இடம்பெறும் தனியார் கல்வி நிலையங்களில், மாணவிகள் மாற்றும் வசதி, மலசல கூடங்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும், அவை சுகாதார பரிசோதகர்களால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.