அநுர அரசு கால் வைக்கும் இடமெல்லாம் கோரமாய் கண்ணிவெடிகள்

”ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை உருவாக்கி மீண்டும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தும் வகையில் இலங்கையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன”
இலங்கையின் அரசியலில் எவருமே நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்தி ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரின் ஜே .வி.பி.- தேசியமக்கள் சக்தி அரசும் தற்போது இலங்கை அரசியலில் எந்த ஜனாதிபதியும் அரசும் எதிர்கொள்ளாதளவுக்கு நெருக்கடிகள்,சர்ச்சைகள்,குற்றச் சாட்டுக்கள்,விமர்சனங்கள்,கேலிகளுக்குள் சிக்கி படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.ஜனாதிபதியும் அரசும் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடிகளும் மிதி வெடிகளாகவுமேயுள்ளன. அதுமட்டுமன்றி இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் இலங்கை ஆட்சியாளர் தலைக்கு மேலாகவும் வெடிக்க ஆரம்பித்துள்ளன . .
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வெற்றியின் மூலம் பாராளுமன்றத்தேர்தலில் 159 ஆசனங்கள் என்ற வரலாற்று வெற்றியுடன் தேசியமக்கள் சக்தி அரசு அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம்,அரிசி,தேங்காய்,குரங்கு,உப்பு,பாதாள உலகம்,படுகொலைகள்,சர்வாதிகாரம்,இந்திய பிரதமரின் வருகை ,ஜனாதிபதியின் இந்திய,சீன விஜயங்கள்,உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்கு வீழ்ச்சி,மின்சாரக் கட்டணம்,வடக்கு காணி சுவீகரிப்பு, 323 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிப்பு, என பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.
ஆனாலும் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் எதிரான இவ்வாறான சர்ச்சைகள் , குற்றச்சாட்டுக்கள் ,விமர்சனங்கள், கேலிகளுக்கு ஜனாதிபதியோ அரசோ இன்றுவரை சரியான பதிலையோ தீர்வுகளையோ விளக்கங்களையோ வழங்காது இவற்றை மக்களை மறக்கடிக்கச்செய்யும் முயற்சியாகவும் இவ்வாறான சர்ச்சைகளை குற்றச்சாட்டுகளை,விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தும்,அடக்கும் விதமாகவும் அரசியல் கைதுகளை அதிகரித்துள்ள நிலையில்தான் ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மோசடி”என்ற கண்ணிவெடிமீது அரசு காலை வைத்தது.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அவரின் தேசிய மக்கள் சக்தி அரசும் தற்போது கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.தேசிய பொசன் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி ஒருவர் ஊழல்,மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே அரசுக்கு எதிரான இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
தேசிய பொசன் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 29 சிறைகளிலிருந்து 338 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்களில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவரும் இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.நாற்பது லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளை முகாமையாளரான இவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
தேசிய பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள், எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாசமினால், இந்தக் குற்றவாளி இவருக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் 2025 பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநு ராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தீர்ப்புவழங்கப்படட 10 தினங்களுக்குள் விடுவிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த எதிர்க்கட்சி, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டிய நிலையிலேயே கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு”என்ற போர்வையில் நடந்த மோசடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு”என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலையில் ”ஜனாதிபதி பொதுமன்னிப்பு”என்றபெயரில் கைதி ஒருவர் மோசடியாக விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது,நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 2024 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது மேலும் 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாக பயன்படுத்தி சில கைதிகளை விடுதலை செய்ததாக குற்றம்சாட்டி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய,அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சர் மோகன் கருணாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில்,இலங்கையில் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேநேரம் கடந்த ஆட்சிகளிலும் இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பு தவறாக பயன் படுத்தப்பட்டுள்ளதா என்பதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய பொசன் தினத்தையொட்டி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட 388 கைதிகளின் முழுப் பட்டியலையும் , பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பப்பட்ட கைதிகளின் பரிந்துரை பட்டியல் மற்றும் அவர் அங்கீகரித்த உரிய பட்டியல் இரண்டும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.ஜனாதிபதி யார் யாருக்கெல்லாம் மன்னிப்பு வழங்க அங்கீகாரம் அளித்தார் என்பதைப் பற்றி மக்களுக்கு பதிலளிக்கும் கடமை ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது
”ஜனாதிபதி பொதுமன்னிப்பு” மோசடியாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய,அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சர் மோகன் கருணாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டாலும் சிறைக்கைதிகள் மோசடியாக விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இல்லாமல் இல்லை. இவ்விருவர் கைது தொடர்பிலும் அரசு காட்டிய அவசரம் அதன் பின்னால் உள்ள அரசியலை மூடி மறைக்கும் ஒரு கைங்கரியமாகவே பார்க்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்கள் அல்லது அரசியல் செல்வாக்கு இல்லாமல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தும் தைரியம் இலகுவில் யாருக்கும் வராது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை முறையற்ற வகையில் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதுல திலகரத்ன என்ற நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்படும் நிலையில், அவர் தனக்கு எதிரான வேறு வழக்கு விசாரணையொன்றுக்காக அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளமையும் அந்த நீதிமன்றத்தில் இடம்பெற்ற அநுராதபுரம் சிறைச்சாலை பணிப்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணையையும் பார்வையிட்டுள்ளமையும் தான் நீதிமன்றத்தில் இருக்கின்றேன் என்று கையுயர்த்தி நீதவானிடமும் தெரிவித்துள்மையும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
அவர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற தனக்கு எதிரான வேறு வழக்கொன்றில் தனது சட்டத்தரணியுடன் கலந்துகொண்டிருந்ததுடன், அந்த விசாரணை முடிவடைந்த பின்னர், சிறைச்சாலை பணிப்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்ற பகுதிக்கு சென்று அங்கு பார்வையாளர் பகுதியில் இருந்து வழக்கு விசாரணைகளையும் பார்வையிட்டுள்ளார்.இவ்வேளையில் சிறைச்சாலை பணிப்பாளர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் விளக்கமளித்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலை பணிப்பாளர் சட்டவிரோதமான முறையில் அதுல திலகரட்ணவை விடுவிக்கவில்லை என்றும், விடுதலையான நபர் இந்த நீதிமன்றத்தில் இப்போது இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார். அவர் சட்டப்படி விடுதலையான காரணத்தினாலேயே இங்கே இருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது அங்கிருந்த அதுல திலகரட்ன, தான் இங்கே இருக்கின்றேன் என்று கையுயர்த்தி கூறியுள்ளார். இவ்வேளையில் நீதிமன்ற வளாகத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளும் இருந்துள்ளனர்.எவ்வாறாயினும் குறித்த வழக்கு விசாரணை முடிந்த பின்னர், அங்கிருந்து அதுல திலகரட்ன தனது நண்பர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாலேயே அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார்.
அவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டிருந்தால் ஏன் அவரை அங்கிருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யவில்லை?அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடவில்லை.அதனால் கைது செய்யவில்லை என்றால் ஏன் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடக்கோரி அரசு தரப்பு நீதிமன்றத்தை இதுவரையில் நாடவில்லை? அவர் அவ்வாறு மோசடியாக விடுதலை செய்யப்பட்டிருந்தால் எவ்வாறு இதுவரையில் தலைமைறைவாகாது தைரியமாக நீதிமன்றம் வந்து தான் இங்கு தான் இருப்பதாக கூறியிருப்பார்?ஆகவேதான் ஜனாதிபதி பொதுமன்னிப்பு என்ற விடயத்தை சிறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனரா அல்லது அமைச்சர்கள் தவறாக பயன்படுத்துகின்றனரா அல்லது ஜனாதிபதியே தவறாகப் பயன்படுத்திவிட்டு அதிகாரிகளை பலிக்கடாவாக்குகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் இதனையும் இந்த அரசு எந்த நியாயமான பதிலும் தீர்வும் வழங்காது கடந்து சென்று இன்னுமொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும்.
ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தும் வகையில் இலங்கையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன ,ஜனாதிபதியாகவிருந்த கோத்தபாய ராஜபக்ஸவின் வீழ்ச்சிக்கும் அவரின் அரசின் வீழ்ச்சிக்கும் ஆரம்ப புள்ளியாக அமைந்தது எரிபொருளுக்கான வரிசை என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அதனால் தான் தற்போதைய இஸ்ரேல்-ஈரான் யுத்தமும் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும் அவரின் அரசுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.பாலா