கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைகள் – தடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் உத்தரவு

கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19.06.2025) நடைபெற்ற கூட்டமொன்றின்போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் மேற்படி கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
கிழக்கு கடற்பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் கடற்கொள்ளைச் சம்பவங்களால் அம்பாறை, மட்டக்களப்பு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும், அதனை தடுப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
கிழக்குப் பிராந்தியத்தில் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்திலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிலும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளின் பாதகமான தாக்கத்தை எடுத்துரைத்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகிய இருவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஏ. ஆதம்பாவா ஏற்கனவே கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.
நிலைமையை விரிவாக மதிப்பாய்வு செய்தல், மீன்பிடி சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமலாக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.
இதன் விளைவாக, இலங்கையின் கிழக்கு கடலோர நீரில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உடனடி தலையீடுகள், நடுத்தர கால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால உத்திகள் உள்ளிட்ட பல கட்ட அணுகுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி மட்டக்களப்பில், அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அரச மற்றும் எதிர்க்கட்சி), இலங்கை கடற்படை, இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்கள, பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள்,கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.