ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட்டது

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட்டது

தெஹ்ரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக இடத்திலிருந்து தூதரக சேவைகள் வழங்கப்படும் என்றும், இலங்கை மாணவர்கள் குழுவும் அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள நான்கு இலங்கையர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் மூன்று பேருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் இருபதாயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும், 35 இலங்கையர்கள் ஈரானில் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அவர்களில் 8 பேர் ஈரானியர்களை மணந்தவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசிக்கும் இலங்கையர்களை அந்நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் வெளியுறவு அமைச்சு, தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இஸ்ரேலில் வேலைகளுக்கு இலங்கையர்களை பரிந்துரைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் மற்றும் வேலைக்கு இஸ்ரேலுக்குத் திரும்பத் திட்டமிடும் இலங்கையர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு 21ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தின் பிரிவு 39 (1) (அ) சரத்தின்படி, வேலை வாய்ப்பு பணியகத்தால் மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலிய வேலைவாய்ப்பிற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படாது.

அந்த நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழுவின் (PIBA) அறிவிப்பின் பேரில் எதிர்காலத்தில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்கான பரிந்துரை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share This