பனை மரம் ஏறி சீமான் போராட்டம்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார்.
கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உழவர் பாசறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
அதன்படி, பெரியதாழை கிராமத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஈடுபட்டார்.
சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணி போல கட்டைகளை வைத்து கயிறு மூலம் கட்டப்பட்டிருந்தது. இதன்மூலம் கள் இறக்க தேவையான சாதனங்களுடன் பனை மரத்தில் சீமான் ஏறினார்.
தொடர்ந்து பனை மரத்தில் இருந்து இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார். மேலும் சீமானும் கள் பருகினார்.