இராணுவ உள்கட்டமைப்புக்கு அருகிலுள்ள பகுதிகளை விட்டு உடன் வெளியேறுங்கள் – ஈரான் பொது மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ஆயுத உற்பத்தி மற்றும் சேகரிப்பு பகுதிகளில் வசிக்கும் ஈரானிய பொது மக்களை அந்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணும் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“உங்கள் பாதுகாப்பிற்காக, இந்த பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறும், மறு அறிவிப்பு வரும் வரை மீள வருவதைத் தவிர்க்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
“இராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் ஆதரவு நிறுவனங்களை சுற்றியுள்ள அனைத்து பொது மக்களும் உடனடியாக அந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆயுத வசதிகளுக்கு அருகாமையில் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே, அரபு மற்றும் பாரசீக மொழிகளில் பகிரப்பட்ட எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், “இஸ்ரேலிய எதிரியின் முக்கிய இலக்குகளை குறிவைத்து இராணுவ நடவடிக்கையை” தொடங்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகள், 2023 அக்டோபரில் காசா போருக்குப் பிறகு இஸ்ரேல் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்கிடையில், ஏமனின் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானுடன் “ஒருங்கிணைக்கப்பட்டது” என்று ஹூதி செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.