அஹமதாபாத் விமான விபத்து – 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு

இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் உயர்மட்டக்குழு 03 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்த போதே இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் கருப்புப்பெட்டி வெள்ளிக்கிழமை மாலை சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
கருப்புபெட்டியை டிகோட் செய்வதன் மூலமாக விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவரும்.
நாட்டில் கடுமையான விமான பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் வலுவான நெறிமுறைகள் உள்ளன. பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
விமான விபத்தை சுற்றியுள்ள எந்தவொரு கோட்பாடும் பகுப்பாய்வு செய்யப்படும். உள்துறை செயலர் தலைமையிலான உயர்மட்ட குழு திங்கட்கிழமை கூட்டத்தை நடத்தும்.
மேலும் அந்த குழுவானது மூன்று மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். விமான விபத்துக்கு பின் போயிங் 787 விமானங்களின் சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை குழுவின் அறிக்கையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
கடந்த வியாழக்கிழமை, இந்தியாவின் அஹமதாபாத்தில், ஏர் இந்தியா விமானம் 171, பிற்பகல் 1:39 மணிக்கு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் சுமார் 279 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.