ஏர் இந்தியா விமான விபத்தை முன்கூட்டியே கணித்த இலங்கையின் பிரபல போதகர் – வைரலாகும் காணொளி

ஏர் இந்தியா விமான விபத்தை முன்கூட்டியே கணித்த இலங்கையின் பிரபல போதகர் – வைரலாகும் காணொளி

விமானப் பயண உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஏர் இந்தியா விமான விபத்தை இலங்கையின் பிரபல கிறிஸ்தவ போதகரான ஜெரோம் பெர்னாண்டோ முன்கூட்டியே கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர் ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.

1.33 நிமிடம் கொண்ட அந்தக் காணொளியில் விமான விபத்தை முன்கூட்டியே கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவின் தேசிய விமான நிறுவனம்” “நடு வானில் பிரச்சினைகளை சந்திக்கும்” என போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இரண்டு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளதை அந்த காணொளி காட்டியுள்ளது.

இதன்படி, 2024 நவம்பர் 24ஆம் திகதி இடம்பெற்ற போதனை நிகழ்வில் அவர் தனது முதல் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நான் ஏதோ ஒன்றைப் பார்க்கத் தொடங்குகிறேன்… உங்கள் தேசிய விமான நிறுவனம் உங்கள் நாட்டிற்குள் பறந்து கொண்டிருந்தது… அந்த விமானம் நடுவானில் அச்சுறுத்தலை எதிர்கொண்டது.” என அவர் பல முறை வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாவது எச்சரிக்கையை அவர் இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு வெறும் 49 நாட்களுக்கு முன்னர் அதாவது 2025 ஏப்ரல் 24ஆம் திகதி விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, “சிவப்பு நிறத்திலான விமானத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அவர் இரண்டாது எச்சரிக்கையின் போது குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அது நடு வானில் பிரச்சினையை சந்திக்கும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் முன்கூட்டிய கணிப்பை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட ஹர்ஷ் கோயங்கா, இலங்கையில், கடந்த சில மாதங்களாக ஏர் இந்தியா பேரழிவு குறித்து போதகர் ஜெரோம் பலமுறை எச்சரித்ததாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த காணொளிக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், “விமான நிறுவனங்கள் நிறம் அல்லது விமானங்களின் பயணப் பாதையை மாற்றுவதை கணிக்க போதகர் ஜெரோமை பணியமர்த்த வேண்டும்” என்று பயனர் ஒருவர் கிண்டலாக விமர்சித்தார்.

இதேவேளை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிய 242 பேருடன் (பயணிகள் மற்றும் பணியாளர்கள்) ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் இருந்த ஒருவரை தவிர 241 பேர் உயிரிழந்தனர். மேலும், விமானம் விடுதி ஒன்றின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274ஆக அதிகரித்துள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோ யார்?

இலங்கையில் உள்ள Glorious Churchஇன் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். கிரிக்கெட் வீரர்கள் உட்பட இலங்கை பிரபலங்கள் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு உள்ளது.

எனினும், கடந்த ஆண்டு பௌத்த மதம் குறித்து வெளியிட்ட சர்ச்சையான கருத்து காரணமாக குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share This