கைதிகள் விடுவிப்பு: பலகோணங்களில் விசாரணை முன்னெடுப்பு

கைதிகள் விடுவிப்பு: பலகோணங்களில் விசாரணை முன்னெடுப்பு

ஜனாதிபதி பொதுமன்னிப்பு என்ற போர்வையில் கடந்த காலங்களிலும் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரா, இதன் பின்புலம் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சட்டத்துக்கு புறம்பாக சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் அமைச்சரிடம் பல கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு பதிலளிக்கும்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

” நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு அனுப்பட்ட பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காத கைதியொருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்தே இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சூத்திரதாரிகளுக்கு எதிராக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும்
மோசடிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இவற்றுடன் சில சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதுதான் சர்ச்சைக்குரிய விடயமாகும்.

சிறைச்சாலை திணைக்களத்தில் மட்டும் அல்ல ஏனைய திணைக்களங்களிலும் இப்படி நடந்திருந்தால் அவை தொடர்பிலும் விசாரணைகளில் தெரியவரும்.

கடந்த காலங்களிலும் கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனரா என்பது பற்றியும் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. தவறிழைத்த அதிகாரிகள்தான் பயப்பட வேண்டும்.
தவறிழைக்காமல், நேர்மையாக செயற்படும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. அவர்கள் சுதந்திரமாக செயற்பட முடியும்.” – என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.

 

CATEGORIES
TAGS
Share This