சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கங்களின் போது சபாநாயகராகவும், சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு நடத்தும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2022 மே ஒன்பதாம் திகதி நடந்த கலவரத்தில் திஸ்ஸமஹாராம, மாகம பகுதியில் உள்ள தனது சொத்து சேதமடைந்ததாகக் கூறி அரசாங்கத்திடம் இருந்து 15.2 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்ற விவகாரத்தில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணைகளில் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது இல்லை எனவும், அங்கு வசிப்பிட கட்டமைப்பு எதுவும் இல்லை எனவும், வெறுமனே ஒரு நெல் சேமிப்பு களஞ்சியம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.
சொத்து தனது கட்டுப்பாட்டில் உள்ளதாக ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம் செய்து அளித்திருந்த போதிலும், மேற்கொண்ட விசாரணைகளில் அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2023 ஜூலை மாதம் வெளியான மதிப்பீட்டு அறிக்கையில், அந்த இடத்தில் 14.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு இருந்ததாகவும், நெல் களஞ்சியத்துக்கு 222,600 ரூபா சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பொது நிர்வாக அமைச்சு, தங்கள் அதிகார வரம்பில் இந்த இழப்பீடு வழங்கப்பட முடியாது என தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. இருப்பினும், முழு தொகையும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், குறித்த மோசடி குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சமல் ராஜபக்ச விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த நிதியை செலுத்துவது தொடர்பான சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரச அதிகாரிகள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.