பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ – பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே புதிய பாலம் கட்ட கடந்த 2002-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் கடந்த 2009-ம் ஆண்டில் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதன்பிறகு கடந்த 2010-ம் ஆண்டில் செனாப் நதியில் இரும்பு கம்பிகளால் பாலம் கட்டும் பணி தொடங்கியது. வடக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் வருகிறது. எனினும் மலைப் பகுதி என்பதால் செனாப் ரயில் பாலம் கட்டும் பணி கொங்கன் ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பாலம் கட்டும் பணி வேகம் பெற்றது.
சுமார் 15 ஆண்டுகள் உழைப்பில், ரூ.1,486 கோடி செலவில் 1,315 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் அகலம், 359 மீட்டர் உயரத்தில் செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இது பிரான்ஸின் ஈபிள் கோபுரத்தைவிட ( 330 மீட்டர்) உயரமானது. உலகிலேயே மிகவும் உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
செனாப் ரயில் பாலத்தில் நேற்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பாலத்தின் மீது தேசிய கொடியை ஏந்தி சென்றார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “செனாப் ரயில் பாலத்தில் தேசிய கொடி கம்பீரமாக பறக்கிறது. மிகச் சவாலான மலைப்பகுதியில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் திறனை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அஞ்ஜி தொங்கு பாலம் திறப்பு: செனாப் ரயில் பாலத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கத்ரா-பெனிகால் இடையே ரூ.435 கோடி செலவில் அஞ்ஜி தொங்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் 725 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த பாலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இது இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம் ஆகும். இதன் உயரம் 77 மாடிகளுக்கு இணையானது.
இதன்பிறகு கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கத்ரா- ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் கத்ராவில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் ரூ.46,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவை பற்றி கூறும்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று குறிப்பிடுகிறோம். அந்த கூற்று இப்போது உண்மையாகி உள்ளது. வைஷ்ணவி தேவியின் அருளால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் இதர பகுதிகளோடு காஷ்மீர் பள்ளத்தாக்கு ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது. புதிய ரயில் சேவையின் மூலம் உதயம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா பகுதி மக்கள் பலன் அடைவார்கள்.
சவாலான மலைப் பகுதியில் வெற்றிகரமாக ரயில் பாதையை அமைத்து உள்ளோம். இந்த பாதையில் செனாப் மற்றும் அஞ்ஜி பாலங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பறைசாற்றுகிறது. புதிய வழித்தடத்தில் கத்ரா- ஸ்ரீநகர் இடையே இரு வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கனவு, நனவாகி உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிய ரயில் பாதையை அமைக்கும்போது பல்வேறு சவால்கள் எழுந்தன. கரோனா பெருந்தொற்று, மோசமான வானிலையிலும் தொய்வின்றி கட்டுமான பணிகள் நடைபெற்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர். அதைவிட செனாப் ரயில் பாலம் உயரமானது ஆகும். இனிமேல் இந்த பாலத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிவார்கள். மேலும் இந்தியாவின் முதல் அஞ்ஜி தொங்கு ரயில் பாலத்தையும் வெற்றிகரமாக கட்டி உள்ளோம். இதுவும் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும். புதிய ரயில் சேவையால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மட்டுமன்றி, தொழில் துறையும் அபார வளர்ச்சி அடையும். காஷ்மீர் ஆப்பிள்கள், உலர்ந்த பழங்கள், காஷ்மீர் குங்குமம், மூலிகைகள் உள்ளிட்டவை ரயில்கள் மூலம் நாட்டின் இதர பகுதிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்லப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 50 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பஹல்காம் தாக்குதல்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் சுற்றுலாவை சீர்குலைக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் வருவாயை தடுக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காக தீவிரவாத தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இது பாகிஸ்தானின் சதித் திட்டம் ஆகும்.
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குதிரையில் அழைத்துச் செல்லும் சையது அடில் ஹூசைன் ஷா என்பவர் தீவிரவாதிகளுடன் தீரமாக போரிட்டு தனது உயிரை தியாகம் செய்தார். பாகிஸ்தானின் சதித் திட்டங்கள், தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் கிளர்ந்து எழுந்து உள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் வலுவான செய்தி எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு காலத்தில் காஷ்மீரில் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. பாஜக ஆட்சிக் காலத்தில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு, வளமான காஷ்மீருக்கு வித்திடப்பட்டு இருக்கிறது. சுற்றுலா, படப்பிடிப்புகள், சாகச விளையாட்டுகளின் மையமாக காஷ்மீர் உருவெடுத்திருக்கிறது.
இது பக்ரீத் பண்டிகை காலம் ஆகும். வரும் ஜூலை 3-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. இந்த காலங்களில் தீவிரவாத தாக்குதல்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காஷ்மீரின் வளர்ச்சிக்காக நான் அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறேன். காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க யாராவது முயற்சி செய்தால், அவர்கள் முதலில் என்னை எதிர்கொள்ள வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் 6-ம் தேதி நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதன்மூலம் பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகள், கோயில்கள், குருத்வாராக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. ஒட்டுமொத்த மக்களும் ராணுவத்துக்கு ஆதரவாக தோளோடு தோள் நின்றனர். இது புதிய இந்தியா. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது கடந்த 1892-ம் ஆண்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்க புதிய ரயில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது எழுந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கு பகுதியை இணைக்க ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக பல ஆண்டுகள் உழைப்பில் கடந்த 1972-ம் ஆண்டில் கதுவா முதல் ஜம்மு வரை 76 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது.
கடந்த 1999-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. அப்போது எழுந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கடந்த 2002-ம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரயில் பாதை அமைக்க அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஒப்புதல் வழங்கினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ரயில் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். குறித்த காலத்தில் திட்டப் பணிகளை நிறைவு செய்யும் யுஎஸ்பிஆர்எல் திட்டத்தை அவர் அமல்படுத்தினார். மேலும் செனாப் ரயில் பாலம் திட்டத்தை பிரதமர் மோடியே நேரடியாக கண்காணித்தார். இந்த திட்டத்துக்கு தேவையான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டது. நாள்தோறும் 3,200-க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி நாட்டின் இதர பகுதிகளுடன் ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச அரங்கில் செனாப் ரயில் பாலம் இன்ஜினீயரிங் அதிசயம் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த பாலம் 120 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து நிற்கும். ரிக்டர் அலகில் 8 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் கூட செனாப் பாலத்துக்கு சிறுசேதம் கூட ஏற்படாது. 40 கிலோ வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினால்கூட பாலத்தை தகர்க்க முடியாது. கடுமையான குளிர்காலத்திலும் செனாப் பாலம் வழியாக ரயில்களை இயக்க முடியும்.
செனால் ரயில் பாலம் பகுதியில் ஆண்டு முழுவதும் பலத்த காற்று வீசுகிறது. இதை கருத்தில் கொண்டு 266 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்தில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.
வடக்கிழக்கில் சிலிகுரி பகுதி, கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியும் கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. ராணுவரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
இங்கு செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டிருப்பது பாகிஸ்தான், சீனாவுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் ஆகும். பாகிஸ்தான் எல்லை பகுதி இங்கிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ளது. போர்க்காலங்களில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், ஆயுதங்களை ரயில் பாதை மூலம் மிக எளிதாக எல்லைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு இணையாக ராணுவ ரீதியாகவும் புதிய ரயில் பாதை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.