தமிழ் விவசாயிகள் மீதான குற்றத்தை நிரூபிக்க பொலிஸாரிடம் ‘எவ்வித ஆதாரமும் இல்லை’

தமிழ் விவசாயிகள் மீதான குற்றத்தை நிரூபிக்க பொலிஸாரிடம் ‘எவ்வித ஆதாரமும் இல்லை’
தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸார் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸாரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன் இன்றைய தினம் (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார்.

குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள சில காணிகளின் உரிமை தொடர்பாக மாகாணத்தின் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையைத் தீர்ப்பதில் முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அந்த காணி தொல்பொருள் துறைக்குச் சொந்தமானதாக சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்பதை பொலிஸாரும் தொல்லியல் திணைக்களமும் ஒப்புக்கொண்டதாக, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வழக்குத் தொடுனர் சார்பில் தொல்பொருள் திணைக்களத்தாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. இந்த இரண்டு சந்தேகநபர்களும் இந்த வழக்கில் இருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நீதிமன்ற கட்டளையிலேயே, விசேடமாக குறித்த பிரதேசமானது இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத் தொடுனரே ஏற்றுக்கொண்டிருந்ததை நீதவான் சுட்டிக்காட்டியிருந்தார்.”

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு விவசாயிகளின் சார்பாக சாட்சியங்களை முன்வைக்க 12 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் மேலும் தெரிவித்திருந்தார்.

தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, புனித பிரதேசத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மே 10 அன்று மூன்று தமிழ் விவசாயிகளை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.

ஆரம்பத்தில் முல்லைத்தீவின் குருந்தூர்மலை பகுதிக்கு 78 ஏக்கர் பரப்பளவு சொந்தமானது என, மே 12, 1933 அன்று ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மேற்கோள் காட்டி தொல்பொருள் துறை அதிகாரிகள்  அறிவித்ததாக அப்பகுதியின் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், தொல்பொருள் கலைப்பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்பொருள் காப்பகத்திற்காக தொல்பொருள் திணைக்களத்தால் வரையறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தன்னிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபடும் அப்பகுதி மக்கள், 229 ஏக்கர் நிலத்தில் அவர்களின் உறவினர்கள் 100 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நெல் வயல்களும் அடங்குவதாக கூறுகின்றனர்.

மே 10 ஆம் திகதி, குருந்தூர்மலை அடிவாரத்தில், மூன்று தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தின் ஊடாக நிலத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரரான கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

மூவரில் பாடசாலை சிறுவனை விடுவிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி டி. பிரதீபன், சந்தேகநபர்களான சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Share This