எல்லை விவகாரம்: ஜூன் 14 தாய்லாந்து-கம்போடியக் குழு சந்திப்பு

கம்போடியா, தாய்லாந்து ஆகிய இருநாட்டு அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் குழு எல்லை விவகாரங்கள் குறித்து இம்மாதம் 14ஆம் திகதி சந்திக்கவிருக்கின்றன.
அந்தச் சந்திப்பு கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் நடைபெறவுள்ளது. இருநாட்டு எல்லைப் பகுதியில் அண்மையில் கம்போடிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எல்லை விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
எமரல்ட் ட்ரையேங்கல் பகுதியில் கடந்த மே மாதம் 28ஆம் திகதி தாய்லாந்து, கம்போடிய துருப்புகளுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததைத் தொடர்ந்து இருநாட்டு அரசாங்கங்களும் எல்லா நிலைகளிலும் ஆலோசனை நடத்தின.
எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வுகாணவே தாங்கள் விரும்புவதாக கம்போடிய வெளியுறவு, அனைத்துலக ஒத்துழைப்பு அமைச்சரான சும் செளன்ரி புதன்கிழமை (ஜூன் 4) அறிக்கையில் குறிப்பிட்டார். அதே நாள் தாய்லாந்துப் பிரதமர் அலுவலகம், இருதரப்பு உறவு சம்பந்தப்பட்ட நடைமுறைகளின் வாயிலாக இப்பிரச்சினைக்குத் தாங்கள் தீர்வுகாணவிருப்பதாக அறிக்கை மூலம் தெரிவித்தது.
தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பகுதிகளில் மொத்தம் ஆறு நிரந்தரச் சாவடிகளும் 10 தற்காலிகச் சாவடிகளும் அமைந்துள்ளன.