இரத்மலானை – பலாலி இடையில் சேவை ஆரம்பம் – சென்னைக்குச் செல்வதைவிட கட்டணம் அதிகம்

2023ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு இரத்மலானை – பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவை நேற்று (02) ஆரம்பமாகியுள்ளது.
அதன் பிரகாரம் நேற்று தகுதிகாண் சேவை முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் விமானசேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனத்தின் ஊடாக, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகின்றது.
வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்த சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, குறித்த விமானசேவை நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு வழி பயணத்திற்கு 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் செல்லும் என்பதோடு, இருவழி கட்டணமாக 68,000 ரூபாய் அறவிடப்படும்.
இந்த விமானத்தில் 11 பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்.
இந்த இரத்மலானை – பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவைக்கு 68,000 ரூபா கட்டணம் நிர்ணயிக்கப்படுவது மிகவும் அதிகமாகும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கட்டுநாயக்கவுக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணமே 40 முதல் 55ஆயிரத்துக்குள் இருப்பதால் 68ஆயிரம் கட்டணம் என்பது மிகவும் அதிகமாகும்.
குறைந்த கட்டணத்தில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டால் மாத்திரமே உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்க முடியும் எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.