போர் வீரர் நினைவேந்தலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தும் மொட்டுக்கட்சி

போர் வீரர் நினைவேந்தலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தும் மொட்டுக்கட்சி

16 வது தேசிய போர் வீரர் நினைவு விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவை கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு தூபியில் நாளை மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறு அவர் கலந்துக்கொள்ளாவிட்டால்
தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் பெயரில் ஜனாதிபதி செய்த மிகப் பெரிய தவறு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஒரு கட்சியாக, அரச தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவையும், பிரதமராக ஹரிணி அமரசூரியவையும் நாளை தேசிய போர் வீரர்களின் நினைவு விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரச தலைவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தவுடன், போரை நிறைவுக்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் தனி விழாவை நடத்த அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது.

ஆனாலும் அந்தக் கோரிக்கை அமைச்சினால் நிராகரிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தேசிய கடமையாக பொதுஜன பெரமுன எதிர்வரும் 20 ஆம் திகதியன்று மாலை 5.00 மணிக்கு போர் போர் வீரர் நினைவு தூபிக்கு அருகாமையில் போர்வீரர் நினைவேந்தலை நடத்த முடிவு செய்துள்ளது” என்றார்.

Share This