கொழும்பு – வெள்ளவத்தையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.
தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்று காலை கொழும்பு – வெள்ளவத்தை கடற்கரையிலும் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மோதலின் இறுதிக் கட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தனர்.
எவ்வாறாயினும், மற்றொரு குழு கூட்டத்தை சீர்குலைக்க முயன்றதாகக் கூறப்படுகின்றது. இதனால் அந்தப் பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட குழுவை கலைக்க முயற்சி செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், பொலிஸ் பாதுகாப்புடன் நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.