யோகிபாபு விடயத்தில் பல்டி அடித்த இயக்குனர்

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கஜானா பட விழாவில் தயாரிப்பாளர் ராஜா, அதில் நடித்த யோகிபாபுவை திட்டி தீர்த்தார். பட புரமோஷனுக்கு வர ஏழு லட்சம் கேட்கிறார். அவர் நடிக்க தகுதி அற்றவர் என பொங்கினார். அந்த பேச்சு வைரல் ஆனது.
இந்நிலையில் கஜானா பட இயக்குனர் பிரகதீஸ் சாம்ஸ் கொடுத்த விளக்கத்தில், “யோகி பாபு எங்கள் படத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
படப்பிடிப்பு திகதி கொடுப்பதில் இருந்து, படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட போஸ்டர்கள் வெளியிடுவது என அனைத்திற்கும் அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்கும் திகதியன்று தவிர்க்க முடியாத சில பணிகள் அவருக்கு இருப்பதால், பங்கேற்க இயலாது, என்று முன்கூட்டியே தெரிவித்து விட்டார். நிகழ்ச்சியை சிறப்பாக நடந்துங்கள், என்று எங்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
ஆனால், நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் ராஜா, யோகி பாபு பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.
அவர் பேசியது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட கருத்தும், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னையும், அதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. எங்கள் படத்தை பொறுத்தவரை யோகி பாபு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
மேலும், ‘கஜானா’ இரண்டாம் பாகத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். அதற்கான திகதிகளையும் அவர் எங்களுக்கு கொடுத்து விட்டார், என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எங்கள் நிகழ்ச்சியில் அவரைப் பற்றி வெளியான சர்ச்சையான கருத்துக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். கஜானா படத்தின் தயாரிப்பாளரும் நான் தான்” என்று தெரிவித்துள்ளார்.