பஹல்காம் தாக்குதல்; இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல் கடிதம்

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்தத் தாக்குதலைக் கண்டித்து. இதை ‘கொடூரமான குற்றம்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் குறிப்பாக உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் மூன்று தசாப்த கால பிரிவினைவாத பயங்கரவாத மோதலை நினைவு கூர்ந்துள்ள ரணில் விக்ரமசிங்க, பஹல்காம் தாக்குதல் தீவிரவாதத்தின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை தெளிவாக நினைவூட்டுகின்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை ஒருங்கிணைந்த முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளிகளின் மலையேற்ற சுற்றுலா பகுதியை சுற்றியுள்ள அடர்ந்த காடுகளில் இருந்து வெளிவந்த பயங்கரவாதிகள் குழுவால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல இராஜதந்திர நடவடிக்கைகளை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.