டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் – பொலிஸார் உறுதிப்படுத்தினர்

டான் பிரியசாத் உயிரிழந்துவிட்டார் – பொலிஸார் உறுதிப்படுத்தினர்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் வைத்து டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இதில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று (22) இரவு 9.10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்றும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று இரவு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று காலை உறுதிப்படுத்தியது.

டான் பிரியசாத்தின் தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும், மார்பில் மேலும் இரண்டு துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மற்றொருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This