பெருந்தொகை போதைப் பொருளுடன் அமெரிக்க பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளுடன் வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகை முனையத்தில் வணிகப் பயணிகளுக்காக நியமிக்கப்பட்ட ரெட் சேனல் வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
31 வயதான சந்தேக நபர் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்று கூறப்படுகிறது.
குறித்த நபர் தாய்லாந்தின் பெங்காக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 ஊடாக நேற்று காலை 10:15 மணிக்கு கட்டுநாயக்க வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 கிலோகிராம் குஷ் அவர் எடுத்துச் சென்ற பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குஷ், ஹஷிஷ் மற்றும் கோகைன் போன்ற போதைப்பொருட்களை இலங்கைக்குள் கடத்த முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.