அநுர அரசு வீழ்ச்சியடைய காரணமாக இருக்கப்போவது யார்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பி.ஆர். என்று அழைக்கப்படும் பசில் ராஜபக்சவே காரணமாக இருந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அமைச்சர் பி. ஆர். அழைக்கப்படும் பிமல் ரத்நாயகவே காரணமாக அமைவார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“கடந்த வார அமர்வின் போது சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க எம்மை தொடர்புபடுத்தி குறிப்பிட்ட விடயம் முறையற்றது. அவற்றை முழுமையாக நிராகரிக்கிறேன். நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அச்சமடைந்து மிகவும் கீழ்த்தரமான முறையில் எம்மீது சேறு பூசினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் வடக்கு,கிழக்கு மாகாணத்துக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்பட்டது. இதனை அனைவரும் அறிவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநாத், ஸ்ரீநேசன் ஆகியோருக்கு நிதி கிடைக்கப்பெற்றதாக சபை முதல்வர் கூறுகின்றார். இவர்கள் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கவில்லை.
ராஜபக்சர்களுடன் இணைந்து நான் அரசியல் செய்ததாகக் கூறினார். ஆம் அது எனது தவறான அரசியல் தீர்மானம் என்பதை நான் எனது மக்களுக்குக் குறிப்பிட்டுள்ளேன். தற்போது எனது மக்கள் என்னை இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்துள்ளார்கள். கடந்த கோட்டாபயவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பி.ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ச காரணமாக அமைந்தார். அதேபோல, இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பி.ஆர். என அழைக்கப்படும் பிமல் ரத்நாயக்க காரணமாக இருப்பார்.” என்றார்.