உர மானிய நிதி திருடப்பட்டுள்ளது – குற்றம் சுமத்தும் விவசாய பிரதி அமைச்சர்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானிய நிதி சில விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், அந்த நிதி திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண இன்று (18) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானிய நிதியில் 2,934,310 ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு அதிகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சில விவசாயிகளிடமிருந்து உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.