டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட நிறைவு – பகலிரவு டெஸ்ட்டில் மோதும் ஆஸி., இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட நிறைவு – பகலிரவு டெஸ்ட்டில் மோதும் ஆஸி., இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட கால நிறைவினை கொண்டாடும் விதமாக, விஷேட பகலிரவு டெஸ்ட் போட்டியொன்று அவுஸ்திரேலிய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த டெஸ்ட் போட்டி 2027ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 11 தொடக்கம் 15 வரையிலான காலப்பகுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1877ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் இரண்டு வருடங்களில் 150 வருட பூர்த்தியினை எட்டவிருக்கின்றது.

ஏற்கனவே இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் 100 வருட பூர்த்தியினைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட நிகழ்வின் தொடர்ச்சியாகவே அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி 150 வருட நிறைவினை ஒட்டி 2027ஆம் ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் டெஸ்ட் கிரிக்கெட் மீதான கிரிக்கெட் இரசிகர்களின் ஆர்வத்தினை அதிகரிக்கும் பொருட்டே இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு மோதலாக மாற்றப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மறுமுனையில் மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கின்ற முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி அமைவதோடு இது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குவதில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share This