சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து

சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து

நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த என்ற பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

நானுஓயாவிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த பேருந்தை கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் நானுஓயா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் மோதிய பின்னர், முச்சக்கர வண்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ரக வாகனம் மீது மோதியது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், விபத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் நுவரெலியா பகுதியை பார்வையிட்ட பின்னர் நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து எல்ல நோக்கி பயணிப்பதற்காக நானுஓயா ரயில் நிலையம் சென்றபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

Share This