இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்து யாழ். திரும்பி இளைஞர்கள் சாதனை

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா பயணம் 120 நாட்களில் பின்னர் நேற்றைய தினம் மீண்டும் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் நிறைவடைந்துள்ளது.
குறித்த இளைஞர்கள் வான் ஒன்றினை வீடாக மாற்றி அதில் சகல வசதிகளையும் உள்ளடக்கி, 25 மாவட்டங்களுக்கும் அந்த வானிலேயே சென்று, அன்றாட செயல்பாடுகளை முன்னெடுத்தனர்.
இவர்கள் நால்வரும் 25 மாவட்டங்களுக்கும் சென்று, அந்த 25 மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலாத்தலங்களை அடையாளப்படுத்தி அந்த இடங்களுக்கு அனைவரும் சென்று வரலாம் என்று எண்ணப்பாட்டினை இலங்கை மக்கள் மத்தியில் அல்லாமல் குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற மக்களின் மனதிலும் ஏற்படுத்தி சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு வலுச்சேர்த்துள்ளனர்.
இலங்கையின் அதிகளவான வருமானம் சுற்றுலா துறையின் மூலமே ஈட்டப்படுகின்றது. அந்தவகையில் சுற்றுலாத் துறை வருமானத்தை அதிகரிப்பதற்காக இளைஞர்கள் எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.