இரண்டாம் உலகப் போர் – 80 ஆண்டுகள் நிறைவு : சீனாவில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்வில், சீனாவின் நட்பு நாடுகள் உட்பட சுமார் 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நீண்ட காலத்திற்கு பின்னர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் தியான்மென் சதுக்கத்திற்கு வருகை தந்து சீன ராணுவத்தின் அணிவகுப்பை பார்வையிட்டனர்.
ஒற்றுமை ஊடாக, அமெரிக்காவுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஸ்கியன், பெலாரஷியாவின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாசென்கோ, கம்போடிய மன்னர் நரோதம் சிகாமணி, வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவாங், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், மியான்மார் ராணுவ தலைவர் ஆங் ஹிலாங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், கசகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் மற்றும் கியூபா ஜனாதிபதி மிகுவெல் டயாஸ் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் செர்பியா ஜனாதிபதி மற்றும் ஸ்லொவாக்கியா பிரதமரை தவிர ஏனைய தலைவர்கள் பங்கேற்கவில்லை.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது