ரீல்ஸ் மோகத்தால் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண் – பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குவதை
வழமையாகக் கொண்டுள்ளார். அண்மையில் இவர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி, ரங்காரெட்டி மாவட்டம், நாகலபல்லி – சங்கர பல்லி இடையே 7 கி.மீ தூரத்துக்கு தண்டவாளத்தின் மீது தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன்போது இதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அங்குள்ள பொதுமக்கள் காரை நிறுத்துமாறு எச்சரித்துள்ளனர்.
ஆனால், குறித்த பெண் அதனை கருத்திற்கொள்ளாது காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதன்போது
பக்கத்து தண்டவாளத்தில் ரயில் வந்துள்ளது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியுற்ற ரயில் சாரதி உடனே இது தொடர்பாக அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதற்குள் பொதுமக்கள் அந்த காரை நிறுத்தி, காரில் இருந்து அந்த பெண்ணை இறக்கினர்.
இதன்பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் காரையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.