கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது.
இதன்போது மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.
தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 ஆசனங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஐந்து ஆசனங்களும் பெறப்பட்டிருந்தன.
மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான்கு ஆசனங்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் மூன்று ஆசனங்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் இரண்டு ஆசனங்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் இரண்டு ஆசனங்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா இரண்டு ஆசனங்களும் பெற்பட்டிருந்தன.
எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் யாரும் பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் முதல் கூட்டம் நாளை (ஜூன் 16 அன்று) நடைபெறவுள்ளதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.