
சீரற்ற வானிலை – முல்லைத்தீவில் 39,193 பேர் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 12691குடும்பங்களை சேர்ந்த 39193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 656 குடும்பங்களை சேர்ந்த 2062 நபரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4400 குடும்பங்களை சேர்ந்த 13559 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5443 குடும்பங்களை சேர்ந்த 17132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1408 குடும்பங்களை சேர்ந்த 4041 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 520 குடும்பங்களை சேர்ந்த 1811 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 264 குடும்பங்களை சேர்ந்த 588 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (02.12.2025) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் உறவினர் வீடுகளில் 3620 குடும்பங்களை சேர்ந்த 9913 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1186 குடும்பங்களை சேர்ந்த 3178 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
