இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 வீத வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.

வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44 வீதம் ஆகும்.

அதன்படி, இந்த முறை அமெரிக்கா அறிவித்த வரி விகிதம் முன்னர் அறிவிக்கப்பட்ட வரி விகிதத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (09) அறிவித்தார்.

இலங்கையைத் தவிர, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் 25 வீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20 வீத வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ஏற்றுமதிகளுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவித்த 30 வீத வரி விகிதம் “பலவீனமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நாம் செலுத்த வேண்டிய விலை” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், அதன் ஈகோ காரணமாக, பேச்சுவார்த்தைகளில் இலங்கையர்களின் ஆதரவை நாடவில்லை என்று கூறி, எதிர்க்கட்சித் தலைவர், இது தான் செலுத்த வேண்டிய இழப்பீடு என்று வலியுறுத்துகிறார்.

 

Share This