
இலங்கையில் புலிகளின் உயிரிழப்பு வியத்தகு அளவில் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகள் உட்பட பல்வேறு காரணங்களால் நாட்டில் 25 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 14 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விலங்குகளை வேட்டையாட வைக்கும் பொறியில் சிக்கி ஐந்து சிறுத்தை புலிகளும், விஷம் உண்டமையால் ஐந்து சிறுத்தைப் புலிகளும், வாகனங்களில் மோதி இரண்டு சிறுத்தைப் புலிகளும், சுடப்பட்டு ஒரு சிறுத்தைப் புலியும், நோய் தொற்று காரணமாக சில சிறுத்தைப் புலிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் இயக்குநர் (சுகாதாரம்) வைத்தியர் சி. ஜி. விஜேசிங்கே இதனை தெரிவித்துள்ளார்.
புஸ்ஸல்லாவ, லக்ஷபான, லிந்துல, கொத்மலை, தலவாக்கலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டில், மத்திய வனவிலங்கு மண்டலத்தின் பல்லேகலே மற்றும் தலவாகலை பகுதிகளில் முள்வேலியில் சிக்கிய இரண்டு சிறுத்தைப் புலிகள் கால்நடை மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டு, ரந்தெனிகல சுகாதார மேலாண்மை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் விக்டோரியா ரந்தெனிகல ரந்தம்பே சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டதாகக் கூறினார்.
இலங்கைப் புலி இந்த நாட்டின் காடுகளில் மட்டுமே காணப்படும் ஒரு வேட்டையாடும் பாலூட்டி என்றும், உலகின் எட்டு புலி இனங்களில் ஒன்றாக நியமிக்கப்பட்ட இலங்கைப் புலி, இந்த நாட்டிற்கு மட்டுமே சொந்தமானது என்றும், அழிவின் அச்சுறுத்தலில் உள்ள ஒரு இனமாகும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், இந்த நாட்டில் 51 புலி இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், வருடாந்திர புலி இறப்புகளில் சுமார் இருபது சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும், மேலும் பல புலி இறப்புகள் பதிவாகாமல் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், நாட்டின் காடுகளில் வாழும் மிகப்பெரிய வேட்டையாடும் விலங்குகளின் உயிர்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
