இஷாராவுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொழும்பு புதுக்கடை இலக்கம் 06 நீதிமன்ற அறைக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கொலையின் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்றிருந்தார்.
நேபாள பாதுகாப்பு பிரிவினருடனான விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 06 சந்தேகநபர்கள் நேற்று முன்தினம்(15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.