அரசாங்கத்தின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை

ஜனாதிபதி அலுவலக, அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்டதை விடவும் அதிக விலைகளை சமர்ப்பித்த ஏல விண்ணப்பதாரர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட 26 வாகனங்களில், 17 வாகனங்கள் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ மதிப்பீடுகளை விட அதிக விலைக்கு ஏலம் கோரியவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அத்துடன் குறைந்தபட்ச மதிப்பீட்டை எட்டாத காரணத்தினால் ஒன்பது வாகனங்கள் விற்பனை செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏல செயன்முறையினூடாக வாகன விற்பனை குறித்த பல்வேறு செய்திகளை உருவாக்கி விளம்பரப்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் என்றும், அவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கவுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.