2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
“உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026-2030 அரச நிதிச் சட்டகம் மற்றும் அரச நிதி மூலோபாயக் கூற்று மற்றும் தேசிய கொள்கைச் சட்டகமான “செழிப்பான நாடு – அழகான வாழ்வு” எனும் கொள்கைச் சட்டகத்திற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது தேசிய கொள்கைச் சட்டகத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய அமைச்சுக்களின்
விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்கள் அடையாளங்கண்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து அமைச்சுக்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பு 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கு ஏற்றவாறு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.