புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜீவன்

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜீவன்

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை  நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை முற்றிலும் தவறான செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டது. இதனை நாம் வரவேற்கின்றோம். இந்த அதிகார சபை பெருந்தோட்ட மக்களுக்கு சேவைகளை செய்வதற்கு தேவைப்படுகின்ற ஒரு இயந்திரம்

இதேவேளை, மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை பொருத்தவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலத்தினைக்கொண்டு பெருந்தோட்ட நிறுவனங்களினை கட்டுப்படுத்தி மக்களுக்கான சேவைகளையும், அபிவிருத்திகளையும் முன்னெடுத்திருந்தோம்.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்பொழுது எதிர்க் கட்சியில் அமர்ந்ததோ அன்றே இந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் அனைத்தும் தங்களது அதிகாரத்தினையும் ஆதிக்கத்தினையும் வலுப்படுத்திக்கொண்டுள்ளன.

மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை பொருத்தவரை அது பெருந்தோட்ட நிறுவனங்களின் இயந்திரம். அது மக்களுடைய இயந்திரமல்ல.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டுவந்திருந்தார்கள்.

இதனை செயற்பாட்டுக்கு கொண்டுவந்ததன் பின்னர் எந்த ஒரு பெருந்தோட்ட நிறுவனமும் இயங்க முடியாது நேரடியாக சுதந்திரமாக மக்களுடைய சேவைகளை இலகுப்படுத்தி செய்துக்கொள்வதற்கு அமைவாக செயற்படக்கூடியது.

குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தங்களுடைய வீடுகளை கட்டுவதற்கு கூட தோட்ட முகாமையாளரிடம் அனுமதி பெறக்கூடியதாக உள்ளது.
ஆனால் இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டு நேரடியாக சகலப் பிரச்சினைகளுக்கும் ஒரு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

மேலும் நாங்கள் எங்களது தொழிற்சங்க பலத்தினைக்கொண்டு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளோம். தற்போதைய அரசானது இதில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றியுள்ளதென்றால் அது கேள்விக்குறியே.

நேரடியாக காணி உரிமை/வீடுகளை கட்டுவதற்கான அனுமதி பெறுவது என்பன இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டு செய்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்று சுயாதீனமாக நேரடியாக இயங்கக்கூடிய ஒரு அதிகார சபையாகும்.

இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை சரியாக இயங்குவதில்லை என்றும் அதனால் குறித்த அதிகார சபையினை மூடுவதாக அரசாங்கம் எடுத்த தீர்மானமானது வேடிக்கையான விடயம்.

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தால் மாத்திரமே இயக்க முடியும். மாறாக நிதி இலாமல் எவ்வாறு கொண்டு நடாத்த முடியும்?

மேலும் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பலம்/அதிகாரம் என்னவென்று தெரியாமல் ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார்.

இதன் காரணமாகவே இது முறையாக இயங்குவதில்லை என்றும், இதனை அமைச்சின் ஒரு பிரிவாக மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக ஏனைய நிறுவனங்கள் போன்று அல்ல புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையானது.

பிரதி அமைச்சரும் மலையக ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் உண்மைக்கும் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் மலையக மக்கள் அதிகப்படியான நம்பிக்கையில் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தீர்த்து வைப்பதற்கும் அதற்கான பதில் வழங்குவதற்கும் திறானி அற்றவர்களாகவும் முதுகெழும்பு இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் கூட எங்களை கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் இன்று ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக ஆளும் மலையக பிரதிகள் இருக்கின்றார்கள்.

குறிப்பாக இன்றைய சூல்நிலையில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் கட்சியில் யாரும் அமைச்சரைவையில் இல்லை. ஆகையால் இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை இல்லாமலாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் தவறான செயற்பாடாகவும் இதனை நான் பார்க்கின்றேன்.

குறைந்தளவிலான செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், சேமிப்பதற்காகவும் அனைத்து நிறுவனங்களை இல்லாமல் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. உதாரணமாக இலங்கை மின்சார சபையினை எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய இளைஞர் யுவதிகளின் மத்தியில் அதிகப்படியான ஆதங்கங்கள் இருக்கின்றன. அவை நியாயமானதாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த ஆதங்கங்களை ஆயுதமாக பயண்படுத்தி நாட்டை இந்த அரசாங்கம் சீரலிக்கின்றார்கள்.

மலையக மக்கள் மீது உண்மையாக அக்கறையும் தேவைப்பாடும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கு இருக்குமாயின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவற்கு எதிராக ஒரு அறிக்கையினை வெளியிட வேண்டும்” என்றார்.

Share This