வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்தாவிட்டால் தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் 1951 முதல் 2004ஆம் ஆண்டு வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பணி முன்னெடுக்கப்படுகின்றது.
2004ஆம் ஆண்டுக்கு பின்னர் அண்மையில் பிஹாரில் இப்பணி நடைபெற்றது.
இந்நிரலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 28ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளன.
இதற்கு தமிழக ஆளும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையிலேயே, முதலமைச்சர் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் 49 கட்சிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு நாட்டின் பல்வேறு கட்சிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்திய அரசின் கைப்பாவையாக, எதேச்சதிகாரப் போக்குடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதை கண்டிப்பதாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
