கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, சந்தேக நபர் சிறையிலிருந்து தப்பியோட்டம் – இரு அதிகாரிகள் பணிநீக்கம்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சார்ஜென்ட் ஒருவரும் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ“ ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அறையின் கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சமீபத்தில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரியும், அப்போது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாகவும பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.