வைத்தியசாலையில் இருக்கும் ரணிலுக்கு சிறப்பு பாதுகாப்பு

வைத்தியசாலையில் இருக்கும் ரணிலுக்கு சிறப்பு பாதுகாப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எட்டு சிறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் இரண்டு ஜெயிலர்கள் மற்றும் நான்கு ஆயுதமேந்திய அதிகாரிகள் அடங்குவர். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி நேற்று வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இது அவரது ஆரம்ப பரிசோதனைகள் மற்றும் மேலதிக சிகிச்சைக்காக என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சோதனைகள் முடிந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் அவர் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி இரவு நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் மகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கைதியாக பதிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This