யாசகம் பெறும் சிறுவர்களை கண்டறிய விசேட நடவடிக்கை

பாதுகாவலர்கள் இன்றி யாசகம் எடுத்து பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வு பணியகம் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியக தலைமையகத்துடன் இணைந்து செயற்படுத்துகிறது.
இந்த நடவடிக்கைகள், கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸ, களுத்துறை மற்றும் தங்காலை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன.
அநுராதபுரம், கண்டி, குருநாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுவர்களை பொதுவாக நெரிசலான பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகமாக இருக்கும் கடைத்தொகுதிகளுக்கு அருகிலும், போக்குவரத்து விளக்குகளுக்கு அருகிலும் காணப்படுகிறார்கள்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இதுபோன்ற 21 சிறுவர்கள், தொடர்புடைய அதிகாரிகளின் காவலில் எடுக்கப்பட்டு உரிய பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.