பிளவு அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவதாக தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி உறுதி

தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் வெற்றிப் பெற்றுள்ளார்.
அவர் சுமார் 50 சதவீத வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு, மக்களின் வாழ்க்கைக்காக உழைக்க விருப்பமற்ற அரசியல் பிரிவுகளே காரணம் என கூறிய லீ ஜே-மியுங் மக்களை ஒன்றிணைக்க பாடுபடுவதாக தனது பதவியேற்பு உரையில் தெரிவித்தார்.
பிளவு அரசியலை முடிவுக்குக் கொண்டுவரும் ஜனாதிபதியாக மாறுவேன் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
மேலும் அவசரகால பொருளாதார பணிக்குழு உடனடியாக செயற்படுத்தப்படும் என்றும் லீ ஜே-மியுங் அறிவித்தார்.
ஆனால் அவர் போராட வேண்டியது உள்நாட்டுப் பிரச்சினைகள் மட்டுமல்ல. புதிய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க-கொரிய கூட்டணியை வழிநடத்தல், சீனாவுடனான அதன் உறவுகளை சமநிலைப்படுத்தல் மற்றும் அதன் நெருங்கிய அண்டை நாடான வட கொரியாவை கையாளுதல் போன்ற அவசர வெளிநாட்டு சவால்களையும் லீ எதிர்கொள்கிறார்.
தென்கொரியாவில் இராணுவ அவசர நிலையை செயற்படுத்தியதற்காக அப்போதைய ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தென்கொரிய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த 02 மாதங்களுக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.
இதனைத் தொடர்ந்து ஜூன் 03 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ அறிவித்தற்கமைய அந்நாட்டில் தேர்தல் இடம்பெற்றது.