வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் வரகை தந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரில் வருகை தந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை காரில் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.
அதன்பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்ளை கூறிய ஆயுதத்தினால் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
மற்றைய நபர் மீது காரில் வருகை தந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மேல்நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் முன்னிலையாகி கையொப்பமிட சென்றவர் என்று தெரியவந்துள்ளது.
கையொப்பமிட்டதன் பின்னர், அவரும் மற்றுமொருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே, குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.