உணவு வீணாவதைக் குறைப்பது அவசரத் தேவை – பிரதமர் வலியுறுத்தல்

உணவு வீணாவதைக் குறைப்பதும், உணவுப் பாதுகாப்பின்மையைக் குறைப்பதும் அவசரத் தேவையென பிரதமர் ஹரிணி அமரசூரிய
வலியுறுத்தினார்.
கொழும்பில் உள்ள ITC ரத்னதீபா ஹோட்டலில் இன்று நடைபெற்ற “கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர் மற்றும் ஆற்றலை மேம்படுத்துதல்” என்ற கொள்கை உரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய அளவில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைப்பு, புதுமை மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகிய மூன்றும் முக்கிய காரணிகள் என்றும், தொழில்நுட்ப தீர்வுகள், வேளாண்மை சந்தைப்படுத்தல் பட்டறைகள் மற்றும் உணவு முறைக்கு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு மூலம் இதனை அடைய முடியும் எனவும் பிரதமர் கூறினார்.
இந்தக் கொள்கை உரையாடல், கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிற மேம்பாட்டு பங்காளிகளின் நிதி உதவியுடன், உலக வங்கி, இலங்கைப் பிரதமர் அலுவலகம் மற்றும் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உணவு வீணாவதைக் குறைத்தல், உணவு முறையை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான வள பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த இரண்டு நாள் கொள்கை உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிகா படபெந்தி, நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய இயக்குநர் டேவிட் சிஸ்லன், கேட்ஸ் அறக்கட்டளை இயக்குநர் அர்ச்சனா வியாஸ், பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டே உள்ளிட்ட தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.