பாகிஸ்தானில் 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன் தினம் சிறியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக கராச்சியின் மாலிர் சிறையில் இருந்த கைதிகள் மற்றுமொரு இடத்துக்கு கொண்டுசெல்வதற்காக விடுவிக்கப்பட்டனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் மாலிர் சிறையில் 6,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் இருந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர்
போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஃ
நிலநடுக்கத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் தங்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதன்போதே கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் 80 இற்கும் மேற்பட்டோர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
135 இற்கும் மேற்பட்ட கைதிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.