
அமெரிக்கா விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – வடகொரியா எச்சரிக்கை
தனது நாட்டிற்கு எதிரான விரோத போக்குகளையும், கொள்கைகளையும் அமெரிக்கா கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியாவின் ஆளும் கட்சியின் மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு நடத்தும் கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தனது அணு ஆயுத இராணுவத்தை வலுப்படுத்த புதிய ஆயுத அமைப்புகளை உருவாக்கவும் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீருக்கடியில் இருந்து ஏவக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் தென் கொரியாவை குறிவைக்கும் திறன் கொண்ட பீரங்கி மற்றும் குறுகிய தூர ஏவுகணைகள் போன்ற தந்திரோபாய அணு ஆயுதங்களின் விரிவாக்கப்பட்ட ஆயுதக் கிடங்கை அவர் நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சமீபத்திய ஆண்டுகளில் வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களின் விரைவான வளர்ச்சி, அணு ஆயுதம் ஏந்திய நாடாக நாட்டின் நிலையை “நிரந்தரமாக உறுதிப்படுத்தியுள்ளது” என்று கிம் ஜாங் உன் கூறியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
