கொரியத் தூதுவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) க்கும் இடையேயான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.
கொரியாவின் புதிய ஆட்சியின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு நெருக்கமாக செயற்பட கொரியா தயாராக உள்ளதாக இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவை வழங்க கொரிய அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் தூதுவர் வலியுறுத்தினார்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) புதிய பிரதிநிதிகள் இங்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்ததுடன், இலங்கையில் முன்னெடுக்கப்படும் KOICA திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, KOICA இலங்கைக்கான பணிப்பாளர் யுலி லீ (Yooli LEE), கொரியா எக்ஸிம் வங்கியின் கொரியா பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் (EDCF) கொழும்பு அலுவலகத்தின் பணிப்பாளர் ஓ ஜியொன்க்- டே (Oh Joeng-tae) ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.