மன்னார் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டார்.
22 உறுப்பினர்கள் கொண்ட மன்னார் பிரதேச சபையின் முதல் அமர்வு இன்றைய தினம் மன்னார் பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.
தவிசாளர் தெரிவிற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டன.
பகிரங்கமாக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழ ரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவலுக்கு ஆதரவாக 09 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரானுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதன் போது ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸிற்கு 15 வாக்குகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.